குமரி: உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாட்டின் கடலோர பகுதி வழியே தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கடலோரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதியை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடலில் மர்ம படகுகளின் நடமாட்டம் உள்ளதா என கண்டறிய ரோந்து பணியும் நடைபெற்று வருகிறது. கடலில் தென்படும் மீனவர்களின் படகுகள் உள்ளிட்ட அனைத்து படகுகளிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர கரையோர மீனவ கிராமங்களில் அந்நியர்களின் நடமாட்டம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடலூர் பாதுகாப்பு குழும போலீசாருடன் உள்ளூர் காவல் துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.