17072024Wed
Last update:Wed, 08 May 2024

ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஒத்துழைக்கும்;: அமைச்சர் ஹக்கீம்

tkn 11 17 nt 03 ndk 0இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்று தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐ.நா. தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அரசு ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா, அமைச்சர் ஹக்கீமை நேற்று முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைக் கூறினார்.

போருக்குப் பின்னரான இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் முனைப்புக் காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்த அமைச்சர் ஹக்கீம், கிழக்கு மாகாண சபையினூடாக முன்னெடுக்கப் படும் பலதரப்பட்ட அபிவிருத்தி முயற்சிகளில் ஜப்பானிய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்வது பெரிதும் பயனளிக்கும் என்றார்.

ஐ.நா. தீர்மானங்களைப் பொறுத்தமட்டில் பிரதான முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் திருப்தியடைகின்aர்களா என தூதுவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், கோர யுத்தத்தின் விளைவாக தமிழ், சிங்கள சமூகங்கள் மட்டுமல்லாது, இந்நாட்டு முஸ்லிம் சமூகமும் பாரிய உயிரிழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளானார்கள் என்றும், அவை பற்றி இலங்கைக்கு அடிக்கடி உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட ஜப்பானிய விசேடத் தூதுவர் அசூசி அகாஸி நன்கு அறிந்து வைத்திருந்தார் என்றும் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.நா. தீர்மானங்கள் தொடர்பில் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டதையும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

கண்டி நகரையும் சூழவுள்ள பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் தூதுவருக்கு விளக்கிக் கூறினார்.

தம்முடன் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியல்ல, சரத் அமுனுகம, எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோரின் ஒத்துழைப்பும் அதற்காக பெற்றுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் தெரிவித்தார்.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டங்களில் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தின் ஒத்துழைப்பு பற்றியும் அமைச்சர் ஹக்கீம் பாராட்டினார்.

மற்றொரு ஜப்பானிய நிறுவனமான ஜெடிரோ பற்றியும் அமைச்சரும், தூதுவரும் கருத்துப் பரிமாறினர்.

இலங்கையில் யுத்த காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய வறுமை நிலை காலப்போக்கில் படிப்படியாக அகன்று வருவதாகக் கூறிய அமைச்சர் இலங்கை யர்களின் கல்வித்தரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி கண்டிருப்பதாகவும் கூறினார்.

குடும்பங்களில் நிலவிய வறுமையும், அறிவீனமும் கூட தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவுக்கு இளைஞர்களை இட்டுச் சென்றதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ள சம்பவம் குறித்தும் அமைச்சரும் தூதுவரும் கவலை தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்பில் ஜப்பானிய தூதரக பிரதித் தலைமை பொறுப்பதிகாரி செல்வி அசாகோ ஓகய், முன்னாள் போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ். தெளபீக் ஆகியோரும் பங்குபற்றினர்.