16072024Tue
Last update:Wed, 08 May 2024

முல்லை மணிக்கு சாஹித்ய ரத்னா

tkn 10 21 ot 12 pgi2015 அரச இலக்கிய விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தாமரைத் தடாக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதன் போது 2014ம் ஆண்டில் சிறந்த தமிழ், சிங்கள, ஆங்கில நூல்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதன் போது விருது பெற்ற தமிழ் நூல்கள், சிறந்த நாவலுக்கான சாஹித்திய விருது இந்த வனத்துக்குள் நாவலை எழுதிய நீ.பி. அருளாநந்தத்திற்கு கிடைத்தது. மொழிபெயர்ப்பு நாவலுக்கு விருது அவர் ஓர் அபூர்வ சிறுவன் நூலை எழுதிய ஏ.மலரன்பனுக்கு வழங்கப்பட்டது. மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுதிக்கான விருது கெகிராவ ஸ¤லைஹாவுக்கு வழங்கப்பட்டது சிறந்த மொழிபெயர்ப்பு

புலமைத்துவ ஆய்வுகள் நூலுக்கான விருது ஓயாத கிளர்ச்சி அலைகள் நூலை எழுதிய மு. பொன்னம்பலத்திற்கு கிடைத்தது.

சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருது : தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள் நூலை எழுதிய தெளிவத்தை ஜோசப்புக்கு கிடைத்தது.

சிறந்த கவிதைக்கான விருது: சொல்லில் உறைந்து போதல் நூலை எழுதிய முல்லை முஸ்ரிபாவுக்கும், சிறந்த நானா வித நூலுக்கான விருது இலங்கை சமூக பண்பாட்டு வரலாறு நூலை எழுதிய க.சண்முகலிங்கத்திற்கு வழங்கப்பட்டன. சிறந்த புலமைத்துவ மற்றும் ஆய்வுகள் படைப்பிற்கான விருது இந்து இலக்கியங்களின் பொருளியல் அரசியல் நீதிபரிபாலனம் நூலை எழுதிய ச. முகுந்தனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நாடகத்திற்கான விருது கலைஞர் கலைச் செல்வனின் குறுநாடகங்கள் நூலை எழுதிய கலைஞர் கலைச் செல்வனுக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை 2015 ம் ஆண்டுக்கான சாஹித்திய ரத்ன விருது கலாநிதி முல்லைமணி (வே. சுப்பிரமணியம்) க்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில் கூறியதாவது,

கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அளித்து வரும் சமூக பங்களிப்பு முக்கியமானது. இந்த விழாவில் கற்ற, தலைசிறந்த வயது முதிர்ந்த எழுத்தாளர்களே அதிகம் விருது பெற்றார்கள். இலக்கிய துறையில் உள்ளோர் சகலரும் கெளரவத்துக்குரியவர்களாவார்கள். பரிபூரண மனிதர்களை உருவாக்க இலக்கியவாதிகள் வழங்கும் பங்களிப்பும் வரவேற்கத்தக்கது.

மனிதனின் ஆரம்ப காலம் முதல் உண்மையானவற்றை உலகுக்கு வெளிப்படுத்தியதும் சரியானதை சரியாக காண்பித்ததும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களுமே எமது நாட்டில் வரலாற்றில் ஒரு காலகட்டத்திலும் நாட்டுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் இவர்கள் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

எமது வரலாற்றில் புராதன பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன. 5 ஆயிரம் வருட பழைய தடயங்கள் கிடைத்தன. பலம் வாய்ந்த நாடுகளுக்கு எம்மை போன்ற வரலாற்று பெருமை மிக்க வரலாறு கிடையாது. கடந்த கால நினைவுகளை உயிரூட்டி எதிர்காலத்தை சுபீட்சமாக்க வேண்டும்.

30 வருட யுத்தம் முடிவு கட்டப்பட்டு சமாதானம் நிலை நாட்டப்பட்டது. மீண்டும் யுத்தம் ஏற்படாதிருக்கும் வகையில் சமூகத்தை மாற்றியமைக்க படைப்பாளிகளுக்கு பங்களிக்க முடியும் கடந்த 10 மாத காலத்தில் நான் அதிகம் பேசியது தேசிய நல்லிணக்கம் பற்றித்தான்.

நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் பங்களிக்க வேண்டும் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவதில் படைப்பாளிகளும் கலைஞர்களும் பெரும் பங்காற்ற முடியும் அரசாங்கத்தின் எதிர்கால நோக்குகளை நிறைவேற்றுகையில் உங்கள் பேனையை மேலும் சிறப்பாக பயன்படுத்துமாறு கோருகிறேன் யுத்தம் எப்பொழுது மனிதனையும் உண்மையையும் அழித்தொழிக்கிறது. சமூகத்திற்கு பயனுள்ளவற்றை அது அழிக்கிறது. யுத்தம் வளங்களை மட்டுமன்றி மனிதாபிமானம் சமூக நீதி, அனைத்தையும் நாசமாக்குகிறது.

படைப்பாளிகள் தமது படைப்புகளை வெளியிடுவதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தவும் சமாதானத்தை மேம்படுத்தவும் பங்களிக்கும் படைப்பாளிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்க இருக்கிறோம். உங்கள் சமூக உயர்வுக்கும் தனித்துவத்துக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் அரசாங்கம் தமது உதவிகளை வழங்க இருக்கிறோம் என்றார்.

கலாசார அமைச்சர் எஸ்.பி. நாவின்னவும் உரையாற்றினார்.