16072024Tue
Last update:Wed, 08 May 2024

கைதிகள் விவகாரம்: இருவாரங்களுக்குள் தீர்வு

nnnஆர்;ப்பாட்டக்காரர்களிடம் ஜனாதிபதி செயலகம் உறுதி

கைதிகளின் உறவினர்கள் கொழும்பில் கதறியழுது பேரணி

சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கண்டனப் பேரணியில் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் கலந்துகொண்டிருந்தனர்.

பேரணியின் இறுதியில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கான மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஏ.கே.கொடிக்கார, இரண்டு வாரங்களுக்குள் கைதிகள் விவகாரத்துக்கு ஜனாதிபதி தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

நேற்று முற்பகல் 10.30 மணிக்கு புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய சம உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல்பிரமுகர்கள், கைதிகளின் உறவுகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய வாசகங்களைக் கொண்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

‘இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்’ என்பதே பிரதான வாசகமாக இருந்தது.

பொன்சேக்காவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்வதில் அசமந்தப் போக்குக் காட்டுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பினர். சிறையில் உள்ளவர் களின் விடுதலையை எதிர்பார்த்திருக்கும் உறவுகள் கண்ணீருடன் இதில்கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்றனர். எனினும், ஹில்டன் ஹோட்டலுக்கு அண்மித்த பகுதியில் வீதித்தடையை ஏற்படுத்தியிருந்த பொலிஸார் பேரணியில் சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்தபோதும் பேரணியில் வந்தவர்களின் பிரதிதிநிதிகள் சிலரை மாத்திரம் ஜனாதிபதி செயலகத்துக்குள் செல்வதற்கு பொலிஸார் அனுமதித் திருந்தனர்.

நீண்டகாலமாக சிறையில் உள்ளவர்களை எதுவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றையும் அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்தனர். ஜனாதிபதி சார்பில் அவருடைய இணைப்புச் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

கைதிகள் விடயத்தில் இரண்டு வாரங்க ளுக்குள் ஜனாதிபதி தீர்வொன்றைப் பெற்றுத்தருவார் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கியிருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் அரசியல் பிரமுகர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், உதய ராசா, நல்லையா குருபரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும் என சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்தார்.

இனங்களுக் கிடையில் குரோதத்தை வளர்த்து யுத்தத்தை ஏற்படுத்தியவர்கள் சிறைச்சாலையில் தற்பொழுது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 200 கைதிகள் அல்ல. அரசியல்வாதிகளே இனவாதத்தைத் தூண்டி யுத்தத்தை ஏற்படுத்தினர். இவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடும்போது தமிழ் இளைஞர்கள் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றோம். சகல கைதிகளையும் விடுவிக்கும்வரை நாம் தொடர்ந்தும் குரல்கொடுப்போம். கடந்த அரசாங்கம் தமது இனவாத அரசியலை கொண்டு செல்வதற்காக சிறைக்கைதிகளை சிறைகளிலேயே தடுத்துவைத்திருந்ததுடன், ஜெனீவாவைக் காட்டி அவர்களை விடுவிக்க மறுத்தது.

தற்போது ஆட்சியமைத்திருக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது கைதிகளின் விடுதலைக்குக் குரல் கொடுத்தபோதும் தற்பொழுது அமைதி காக்கிறது. இராஜ தந்திர ரீதியாக ஜெனீவாவை வென்று விட்டோம் எனக் கூறிக்கொண்டு கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் காக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

தமிழ் அரசியல் பிரமுகர்கள் கண்டனம்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லாத அரசாங்கம் புரையோடிப்போயுள்ள தமிழர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வொன்றைத் தரப்போகின்றது என வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பினார்.

பல வருடங்களாகத் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாவிட்டால் அதனை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் கூறினார்.

இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவுக்கு ஒரு வாரத்துக்குள் பொதுமன்னிப்பு வழங்கி அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்க முடியுமாயின் ஏன் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது.

தமிழர்களின் வாக்குப் பலத்துடன் ஆட்சிபீடமேறியவர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போவதாக அடிக்கடி கூறிவருகின்றபோதும் கைதிகள் விடுதலை விடயத்தில் நல்லிணக்கத்துக்கான எதுவித சாதகமான நிலைப்பாட்டையும் காட்ட வில்லை. இவர்கள் எவ்வாறு நல்லிணக் கத்தை கட்டியெழுப்பப் போகின்றனர் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற உலகத்தில் ஏற்றுக்கொள்ளப் படாத பிழையான சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்வர்களே சிறைச்சாலை களில் நீண்டகாலமாக தடுத்து வைக் கப்படட்டுள்ளனர்.

விருப்பத்துக்கு மாறாக கைது செய்யப்பட்டு, பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப் படையிலேயே இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. நல்லிணக்கம் எனப் பேசிக்கொண்டிருக்கும் அரசாங்கம் அதனை செயலில் காண்பிக்கவில்லை யென்றும் அவர் கூறினார்.