16072024Tue
Last update:Wed, 08 May 2024

இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில் மேலும் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

019 1140x1151நாட்டின் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்படும் நிதி அடுத்த வரவு செலவு திட்டத்தில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

 தற்போது இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்விக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ள அதேநேரம், நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையைப்போன்று நாட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும் வழங்குவது புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

 இன்று (12) நீர்கொழும்பில் பொது வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 200 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளுடன் இந்த புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொறியியலாளர்களின் திறமையை வெளிப்படுத்தி 50 நாட்களில் இக்கருத்திட்டம் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, 2000ஆம் ஆண்டு காலப் பகுதியில் நீர்கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேச வைத்தியசாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கட்டிடங்கள் முறையான நியமங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த நிலைமை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் இந்த புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைப்பதன் மூலம் நிவர்த்திக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சேவைகளில் மாகாண சபையும் அரசாங்கமும் பிரிந்து செயற்பட முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் சகல தரப்பினரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

1909ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீர்கொழும்பு வைத்தியசாலை 1950ஆம் ஆண்டு ஆரம்ப வைத்தியசாலையாக மாற்றப்பட்டதோடு, பிரதேச சனத்தொகை அதிகரிப்பு மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழில் புரிவோரின் தேவைகளை கவனத்தில் கொண்டு 2005ஆம் ஆண்டு அது மாவட்ட வைத்தியசாலையாக மாற்றப்பட்டது.

நினைவுப் படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்து கட்டிடத் தொகுதியை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, வைத்தியசாலையையும் பார்வையிட்டார். இங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சிறுவர்களது சுகதுக்கங்களையும் விசாரித்து அறிந்த ஜனாதிபதி, அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினார்.

சுகாதார போசாக்கு சுதேச வைத்திய துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன், முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பிரணாந்து பிள்ளை, பிரதி அமைச்சர் நிமல் லன்சா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மகிபாலஇ வைத்தியாசலை பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ரணசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

02

03

09