16072024Tue
Last update:Wed, 08 May 2024

ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியுடன் சந்திப்பு

0234 1140x912அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (27) சந்தித்தார்.

 இச்சந்திப்பின்போது ஜனாதிபதியும் அமெரிக்க இராஜாங்க செயலாளரும் இரு நாடுகளின் பரஸ்பர நன்மைகளுடன் தொடர்பான இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

ஐ நா. மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய திரு.ஜோன் கெரி, ஒரு துணை அனுசரணையாளராக இணைந்து கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவு இத்தீர்மானத்தில் பிரதிபலிக்கும் அர்ப்பணங்களை வழங்குவதற்கு நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றுவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தைப் பலப்படுத்தி இலங்கையில் சிவில் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், கடந்தகால நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதவண்ணம் கடந்தகால துன்பகரமான அனுபவங்களுக்கு தீர்வு கூறும் வகையிலும் துணிகரமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதனால் இலங்கைக்கான எமது ஒத்துழைப்பை இத் தீர்மானம் வெளிப்படுத்தி நிற்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டுடன் இலங்கையர்களுக்கே உரிய ஒரு நம்பகமான நீதி செயன்முறையை நோக்கிய ஒரு முக்கிய படியாக இந்த தீர்மானம் அமைந்துள்ளது. இந்த தீர்மானம் காணாமல் போனவர்களது குடும்பங்கள் அவர்களது விருப்பத்திற்குரியவர்கள் தொடர்பாக அறிந்துகொள்வதற்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இது உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதற்கான ஒரு பாதையை அமைத்துக்கொடுக்கும் அதேநேரம் இராணுவத்தினர் உள்ளிட்டவர்களின் நன்மதிப்பை பாதுகாப்பதோடு, பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதிருப்பதை உத்தரவாதப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.