16072024Tue
Last update:Wed, 08 May 2024

அமைச்சுகளின் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

gazzette 1புதிதாக நியமனம் பெற்றுள்ள அமைச்ரவையில், ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று (22) வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைய ஒருசில அமைச்சுக்களின் கீழ் காணப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகளில்  மாற்றம் ஏற்பட்டுள்ளன.

இதற்கமைய தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, இலங்கை மத்திய வங்கி, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, தேசிய இளைஞர் சேவைகள், ஊழியர் நம்பிக்கை நிதியம், மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு உள்ளிட்ட 20 நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ், திறைசேரி, சுங்கம், கலால் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை காப்புறுதிச் சபை, தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை, அரச நிதித் திணைக்களம் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கீழ், சிவில் விமான சேவை அதிகார சபை, வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் ஆகியன கொண்டுவரப்பட்டுள்ளன.

மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு, நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீள்நிரப்புதல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் மாநகர மற்றும்  கையளிக்கப்பட்டுள்ளன.

சட்ட, ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரபனவின் கீழ், சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் கீழ், அரச வங்கிகள், ஶ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா நிறுவனங்கள், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உள்விவகார , வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவிற்கு, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய அருங்காட்சியகத் திணைக்களம் என்பன ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசனின் கீழ், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தேசிய கால்நடை வள அபிவிருத்திச் சபை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட 10 நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்தின் கீழ், மத்திய கலாசார நிதியம்  கொண்டுவரப்பட்டுள்ளது.ச