29032024Fri
Last update:Mon, 04 Mar 2024

யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது என்ற தலைப்பில் சந்திரிகா இம்முறை செல்வா நினைவுப் பேருரை!

Chandrikaயுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' - என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை வருடாந்தம் நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரைத் தொடரில் இம்முறை அந்தப் பேருரையை மேற்படி தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிகழத்துகிறார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு தினத்தை ஒட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்த நினைவுப் பேருரை இடம்பெறும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிப்பர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் செயலாளர் சி.இரத்தினவடிவேல் மேற்கொண்டு வருகின்றார்.