அரச கரும மொழிகள் அமுலாக்கம்: அரசியலமைப்பில் உள்ளடக்குவது குறித்து கவனம்

colmahinda samarasingheஅரச கரும மொழிகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை அரசியலமைப்பில் உள்ளடக்குவது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இதனைச் செய்வதன் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் நேற்று முன்தினம் கொழும்பில் தெரிவித்தார்.

 கிளிநொச்சியில் திறக்கப்படவிருக்கும் இலங்கை ஜேர்மன் பயிற்சி நிலையம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அரசியலமைப்பு சபையில் மொழி தொடர்பான உபகுழுவின் தலைவராக தான் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அரச கரும மொழிகளான சிங்களம் மற்றும் தமிழை சரியாக நடைமுறைப்படுத்துவதை அரசியலமைப்பில் உள்ளடக்குவது பற்றி இதில் கலந்துரையாடியிருப்பதாகவும் தெரிவித்தார். அரசகரும மொழிகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் பல முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு தொழிலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துக் கொடுக்க வேண்டும். இது நல்லிணக்கத்துக்கு மேலும் சேர்க்கும்.

இவ்வாறான பின்னணியிலேயே ஜேர்மன் அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி நிலையமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் மற்றும் ஜீ.ஐ.இசட் நிறுவனத்தின் பிரதிநிதி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.