19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

குறைந்த வருமானம் பெறுவோர் மீது வரி சுமையை சுமத்தப் போவதில்லை

RANIL ndk 4 150pxவற் வரி அதிகரிப்பு மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பவற்றை சில துறைகளில் சேர்ப்பதற்கு காரணம் கடந்த அரசாங்கத்தினால் சுமத்தப்பட்ட கடன் சுமையே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களை நேற்று (20) சந்தித்தபோது கூறினார்.

ஆனாலும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் மீது வரிச் சுமையை சுமத்தப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். சிங்கள புதுவருட வாழ்த்துக்களை பிரதமருக்கு தெரிவிக்க அலரி மாளிகைக்கு வந்த அமைச்சர்களை சந்தித்தபோதே அவர் இதனை கூறினார்.

ராஜபக்ஷ காலத்தில் பணக்காரர்கள் சிலருக்கே வரிச்சலுகை வழங்கப்பட்டது. தேசிய அரசாங்கத்தின் வரி கொள்கை வகுக்கப்படும்போது ஏழை மக்களுக்கு வரி சுமை மிகவும் குறைந்தளவிலேயே சுமத்தப்படுமென கூறினார்.

“அர்ப்பணிப்பு செய்யும் மக்களுக்காக புதிய நாடொன்று” என்னும் தலைப்பின் கீழேயே இம்முறை மே தினம் கொண்டாடப்படும் என எம்.பிகளுக்கும் அமைச்சர்களுக்கும் அவர் நீண்ட விளக்கம் அளித்தார்.

மேதினத்தை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டுமென்றும் கொழும்பில் நடைபெறும் மிகப் பெரிய மேதின கூட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சியே நடத்த வேண்டும் என்றும் கூறியதோடு மேதினத்தில் அரசின் பலத்தைக் காட்டி எதிர்காலத்தில் செயற்படவேண்டிய வழிவகைகள் தொடர்பாகவும் கட்சியின் எதிர்கால அரசியல் பாதை சம்பந்தமாகவும் பிரதமர் கருத்துத் தெரிவித்தார்.