எம்.பிக்களின் தொகை அதிகரிப்பில்; தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்

புதிய தேர்தல் முறை யில் பாராளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக உயர்த்தப்படு மானால், மத்திய, மேல், ஊவா மாகாணங் களில் பெரும் பான்மை இனத்து மக்கள் மத்தி யில் கலந்து வாழும் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதி நிதித்துவங்கள் பாது காக் கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தலா இரண்டு என்ற குறைந்த பட்ச எண்ணிக் கையில் தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட இடமிருக்க வேண்டும்.

 தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தமது ஜனத்தொகைக்கு ஏற்ப தமிழ் எம்.பிக்களை தெரிவு செய்துக் கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை நேரில் சந்தித்து கையளித்த ஆவணத்தில் கோரியுள்ளார்.


இது தொடர்பில் ஊடகங்களிடம் மனோ கணேசன் கூறியதாவது
,

இன்றைய தேர்தல் முறைமை மாற்றப்பட்டு, விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும். தொகுதிக்கு என்று ஒரு எம்.பி. தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அந்த மாற்றங்கள் ஒருபோதும் இன்று சிறுபான்மை இனம் அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்களை குறைத்து விடக்கூடாது.

விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும், தொகுதிக்கு என்று ஒரு எம்.பி. தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று குரல் எழுப்பும் பெரும்பான்மை கட்சிகளுக்கு சிறுபான்மை இனம் இன்று அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது, இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ள ஜனத்தொகை வளர்ச்சி, இடம்பெயர்வு, குடியேற்றம் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும்.

மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களே உத்தேச தேர்தல் முறை மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்பு அடையும் அபாயத்தை எதிர்நோக்குகின்றார்கள். எனவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாம் அதிக அச்சம் கொண்டுள்ளோம். இந்த அச்சம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இந்நாட்டின் சமீப கால வரலாற்றில் தற்போதைய நடப்பு தேர்தல் முறையே தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவங்களை வழங்கியுள்ளது. எனவே இந்த தேர்தல் முறையை மாற்றுவதானால் எங்களது குறைந்தபட்ச உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய தேர்தல் முறை மாற்றத்துக்கு நாம் உடன்பட முடியாது.

இந்த அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து, கொழும்பில் மூன்று, பதுளையிலும், கண்டியிலும் தல இரண்டு என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்படக் கூடிய ஜனநாயக சூழல் ஏற்பட வேண்டும். தமிழ் வாக்காளர்களுக்கு தமது ஜனத் தொகைக்கு ஏற்ப தமிழ் எம்.பிக்களை தெரிவு செய்து கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும். தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது நமது இனத்தின் தலையெழுத்து. ஆனால், சட்டத்தில் இடமிருக்க வேண்டும்.