யாழ் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் விற்பனையை தடுக்க சகலரும் ஒத்துழையுங்கள்: யாழ் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

யாழ் மாவட்டத்தில் மாணவர்களுக்கிடையில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவணையை ஒழிக்க சகலரும் ஒத்துழைக்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது யாழ் மாவட்டத்தில் ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பாக்கு விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதை தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

 அதேவேளை இங்குள்ள பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீது உங்களுக்கு சந்தேகம் என்றால் உடனடியாக, நேரடியாக என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கேட்டு கொண்டார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்திலேயே இவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

யாழ் மாவட்ட மாணவர்களை குறிவைத்து போதை பாக்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சுகாதார வைத்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள்.

இதற்கு பதில் கூறுகையிலேயே பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த கருத்தை தெரிவித்ததுடன் யாழ் மாவட்டத்தில் போதை ஒழிப்பை நடைமுறைப்படுத்த சகலரும் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இதை முற்றாக ஒழிக்கலாம்.

அத்தோடு இந்த நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்த பொலிஸ் மா அதிபர் எனக்கு போதைப்பொருள் தடுப்பு விஷேட அதிரடிப்படையை பயன்படுத்த அனுமதியளித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக நேரடியாக என்னிடம் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.