07052024Tue
Last update:Thu, 18 Apr 2024

அஸ்கிரிய மகா நாயக்கரின் புகழுடல் அக்கினியில் சங்கமம்

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சர்வமதத் தலைவர்கள் பிரசன்னம்

மறைந்த அஸ்கிரிய மகாநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் நேற்று கண்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அரச மரியாதையுடன் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள், மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண முதலமைச்சர், அஸ்கிரிய பீடத்தின் நிலமே மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தனது 85 வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இயற்கையெய்தினார்.

அவருடைய புகழுடல் விமானம் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு, மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்றுப் பிற்பகல் சகல அரச மரியாதையுடன் இறுதிச் சட ங்குகள் நடைபெற்றன. பெளத்த மத வழிபாடுகளுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.